அசாம்: காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் ராஜினாமா - தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவு


அசாம்: காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் ராஜினாமா - தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவு
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 15 March 2024 10:49 AM GMT (Updated: 15 March 2024 12:05 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார்.

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்த நிலையில், இதில் 2 பேருக்கு எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு எம்.பி. அப்துல் காலிக்கிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவர் கடந்த முறை வெற்றி பெற்ற பார்பேட்டா தொகுதியில், இந்த முறை அவருக்கு பதிலாக தீப் பயான் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ள அப்துல் காலிக், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைமைகளின் நடவடிக்கைகள் காரணமாக அசாமில் காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story