போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்


போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்
x

3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலேஒங்கலா தாலுகா தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 18 வயது நிரம்பாத மகள் இருக்கிறாள். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. அதே கிராமத்தை சேர்ந்த அனில் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பைலேஒங்கலா புறநகர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் தனது கிராமத்திற்கு திரும்பினர். வாலிபர் கிராமத்திற்குள் வந்தது குறித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் கிராமத்திற்கு வந்த வாலிபரை, சிறுமியின் குடும்பத்தினர் செருப்பால் தாக்கினர். பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள தெருக்களில் வாலிபரை ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

இதை கிராமத்தினர் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story