ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜெய்ராம் ரமேஷ்


ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜெய்ராம் ரமேஷ்
x

கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது,

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு நல்ல விசயம். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் வாக்குகளுக்கு குறிவைத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்பாக மத்திய அரசு கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story