காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது என்று கூற முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்


காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது என்று கூற முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
x

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது அளிக்கப்படும் என்ற துல்லியமான காலத்தை தெரிவிக்க முடியாது. ஆனால், எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் நடத்த தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவுப்படி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா மூலம் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது.

அத்துடன், காஷ்மீர் என்றும், லடாக் என்றும் 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால் மாநில அந்தஸ்தையும் காஷ்மீர் இழந்தது.

காஷ்மீரில் சட்டசபை இருக்கிறது. லடாக்கில் சட்டசபை இல்லை. காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கிடையே, 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

அந்த அமர்வில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தபோது, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க காலக்கெடு ஏதேனும் உள்ளதா? அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறதா? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி விடுத்தனர்.

இந்நிைலயில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் நீதிபதிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

துஷார் மேத்தா கூறியதாவது:-

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது, தற்காலிகமானதுதான். அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற துல்லியமான காலவரையறையை தெரிவிக்க முடியாது.

காஷ்மீரில் எந்த நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்த தயார். அங்கு ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்கள் முடிந்த பிறகு, சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று கருதுகிறோம். இருப்பினும், எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை மாநில தேர்தல் ஆணையமும், மத்திய தேர்தல் கமிஷனும்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story