மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது


மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 6:45 PM GMT (Updated: 15 Oct 2022 6:45 PM GMT)

மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கார்களை போலீசார் மீட்டனர்.

பெங்களூரு:

மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி பெங்களூருவில் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கார்களை போலீசார் மீட்டனர்.

குத்தகைக்கு வந்த கார் விற்பனை

பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் வாகனங்களை குத்தகைக்கு வாங்கி கொண்டு அவசர தேவைக்கு பணம் கொடுக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புலிகேசிநகரை சேர்ந்த ஒருவர் தனது காரை குத்தகைக்கு விட்டுவிட்டு கடன் வாங்கி சென்று இருந்தார். இந்த நிலையில் அந்த நபரின் காரின் வாகன பதிவெண்ணை அகற்றிவிட்டு காருக்கு புதிய வாகன பதிவெண் பொருத்தி அந்த காரை விற்பனை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த காரின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனால் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய புலிகேசிநகர் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

ரூ.5 கோடி மதிப்பு

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பெங்களூரு கே.ஜி.ஹள்ளி வினோபா நகரை சேர்ந்த ஜாபர்(வயது 30), வசந்த் நகரை சேர்ந்த மனீஷ்(33), பெலகாவி டவுன் மாலமாருதியில் வசித்து வரும் இமாம்(33) ஆகிய 3 பேரை புலிகேசிநகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மராட்டியம், கோவாவில் இருந்து கார்களை திருடி வந்து அந்த கார்களுக்கு புதிய வாகன பதிவெண்ணை பொருத்தி விற்பனை செய்ததும், குத்தகைக்கு வந்த வாகனங்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 16 விலை உயர்ந்த கார்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். கைதான 3 பேர் மீதும் புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story