பெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ரெயில்வே பெண் போலீஸ்


பெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ரெயில்வே பெண் போலீஸ்
x
தினத்தந்தி 22 Aug 2022 4:43 PM GMT (Updated: 23 Aug 2022 10:40 AM GMT)

பெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் பிரசவம் பார்த்தார்.

பெங்களூரு:

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறைமாத கர்ப்பிணி சொந்த ஊருக்கு செல்ல ரெயிலை எதிர்பார்த்து காத்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். அப்போது ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பெண் போலீசான மீனா என்பவர் அங்கு விரைந்து வந்து ரெயில் நிலையத்தில் உள்ள மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது மருத்துவ குழுவினர் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறினர்.

ஆனால் கர்ப்பிணியால் அங்கிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. இதனால் சில பயணிகள் உதவியுடன் அந்த கர்ப்பிணிக்கு மீனாவே பிரசவம் பார்த்தார். ஆனாலும் அந்த கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு ஏற்பட்டதால் கர்ப்பிணியும், குழந்தையும் உடனடியாக கே.ஜி. ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்ரிசக்தி திட்டத்தின் கீழ் முதல்உதவி சிகிச்சை அளிக்க மீனா பயிற்சி பெற்று இருந்ததால் அவருக்கு பிரசவம் பார்க்க தெரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மீனாவுக்கு ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story