என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்


என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்
x

தான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.

அதேவேளை, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

அதேவேளை, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேசுகையில், " என்னை அமலாக்கத்துறை 8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது. தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்டுங்கள். என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன். என் மீதான நடவடிக்கைக்கும் கவர்னர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது. நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் " என்றார்.


Next Story