அமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்


அமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்
x

கோப்பு படம்

அமலாக்க துறை காவலில் இருந்தபடி, மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய தன்னுடைய 2-வது உத்தரவை கெஜ்ரிவால் வெளியிட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை.

இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை ஐகோர்ட்டு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவி விடாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு, அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தனர். இதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது.

நாட்டில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்று கிழமையன்று, தனது முதல் உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி டெல்லி மந்திரி அதிஷி கூறும்போது, தேவைப்பட்டால் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அரசை வழிநடத்துவார். அவரை பணி செய்ய விடாமல் தடுக்க எந்த விதியும் இல்லை. அவர் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.

அதனால், டெல்லி முதல்-மந்திரியாக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறினார். இதேபோன்று, கைது செய்யப்பட்டபோதும், கெஜ்ரிவால் பதவியில் இருந்து விலகவில்லை. அவருக்கு 28-ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் இன்று 2-வது முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுபற்றி டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் வெளியிட்ட செய்தியில், டெல்லியில், நடுத்தர வர்க்க மக்கள் மருந்துகளை எளிதில் வாங்கி விடமுடியும். ஆனால், டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளை நம்பியே உள்ளனர்.

இந்த மருந்துகளில் சில வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய, ரத்த பரிசோதனைகளுக்கு பலரும் இவற்றையே நம்பியுள்ளனர்.

ஆனால், சில மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சென்றது. இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளிலும் இலவச மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என என்னிடம் கேட்டு கொண்டார்.

அவரிடம் இருந்து வரும் உத்தரவு, கடவுளிடம் இருந்து எனக்கு வருவது போன்றது. போர்க்கால அடிப்படையில் அதன்மீது நடவடிக்கை எடுப்போம் என்று பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story