காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்


காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்
x

காட்டில் வாழும் விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமான செயல் என வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள குலாட் பகுதியின் அருகே சுற்றிக் கொண்டிருந்த யானையை உள்ளூர்வாசிகள் துரத்தினர். அப்போது யானையின் வாலை ஒருவர் இழுத்ததால் அங்குள்ள மக்களை அது தாக்கத் தொடங்கியது. வாலை இழுத்து மக்களைத் தாக்கத் தூண்டியதாக கூறி இளைஞர் ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி தல்ச்சர் வனப்பகுதியில் உள்ள குலாட் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சாஹூ என்ற நபர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார் .

இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுசாந்த் நந்தா தனது எக்ஸ் வலைதளத்தில், "எங்களிடம் சகிப்புத்தன்மை இல்லை... யானை உங்களை மிதித்துவிடும் அல்லது எங்கள் சட்டங்கள் மிதித்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும், சட்டத்தின்படி, வன விலங்குகளை கேலி செய்யும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நந்தா தெரிவித்தார்.


Next Story