கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம் 

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக, இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, திருபட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22-11-2023) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

அதேபோல, புதுச்சேரியிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22-11-2023) விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story