நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவன் - பகீர் தகவல்


நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவன் - பகீர் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2024 4:32 AM GMT (Updated: 7 Feb 2024 5:38 AM GMT)

பெங்களூருவில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கணவன் அடித்துக்கொலை செய்தார்.

பெங்களூரு,

பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சந்திரப்பா. அவருைடய மனைவி நேத்ரா (வயது 40). இந்த தம்பதிக்கு 17 வயதில் மகன் உள்ளான். அவர், கோலார் மாவட்டம் முல்பாகலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி நேத்ரா இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

காலை உணவு தயார் செய்ய தாமதம் செய்ததால் நேத்ராவை கொலை செய்ததாக அவருடைய மகன் தெரிவித்தார். இதையடுத்து கே.ஆர்.புரம் போலீசார் 17 வயது மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். தடயஅறிவியல் அறிக்கையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியில் 2 பேரின் கைரேகைகள் பதிவாகி இருந்தன. அதில் ஒன்று மாணவரின் கைரேகை. இதனால் கைதான மாணவரிடம் போலீசார், இரும்பு கம்பியில் மற்றொருவரின் கைரேகையும் பதிவாகி இருப்பது குறித்து விசாரித்தனர். அப்போது கொலை நடந்த சமயத்தில் சிறுவனும், அவனது தந்தை சந்திரப்பாவும் வீட்டில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்திரப்பா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சந்திரப்பாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. நேத்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்தது 17 வயது மகன் இல்லை, கணவர் சந்திரப்பா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை சந்திரப்பாவும் ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர விரும்பியாக இருந்த நேத்ரா, வீட்டில் சமையல் எதுவும் செய்யாமல் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளார். இரவு விருந்துகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் நேத்ராவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து அவரிடம் சந்திரப்பா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சமையல் செய்ய தாமதமானது குறித்து நேத்ராவுக்கும், அவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்பு கம்பியால் நேத்ராவை அவரது மகன் தாக்கி உள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த சந்திரப்பா, அந்த இரும்பு கம்பியால் நேத்ராவை சரமாரியாக தாக்கினார். இதில் நேத்ரா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரப்பா, மகனிடம் சென்று உனக்கு 17 வயது தான் ஆகிறது, உன் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் குறைவான சிறை தண்டனை கிடைக்கும். எனவே கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி திட்டம் தீட்டி கொடுத்துள்ளார்.

தந்தை கூறியபடி 17 வயது மாணவரும் போலீசாருக்கு போன் செய்து, தாயை கொலை செய்துவிட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது கல்லூரிக்கு செல்ல காலை உணவு தயார் செய்து கொடுக்கும்படி தாயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் காலை உணவு தயார் செய்ய மறுத்ததுடன், என்னை மோசமாக திட்டியதால் இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தற்போது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவி கொலைக்கு காரணமாக இருந்த சந்திரப்பா போலீசில் சிக்கி உள்ளார். இதையடுத்து கே.ஆர்.புரம் போலீசார் சந்திரப்பாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story