தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்படவில்லை: ம.தி.மு.க. நிர்வாகக்குழு இன்று அவசர ஆலோசனை


தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்படவில்லை: ம.தி.மு.க. நிர்வாகக்குழு இன்று அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 7 March 2024 1:39 AM GMT (Updated: 7 March 2024 1:43 AM GMT)

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் ம.தி.மு.க. நிர்வாகக்குழு இன்று கூடுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் ம.தி.மு.க. ஏற்கனவே 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னையில் ம.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story