ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Aug 2021 7:20 PM GMT (Updated: 3 Aug 2021 7:20 PM GMT)

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை, 

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் ஜங்லி கேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான தனியார் நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. 

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்தநிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர்.

அதில், ‘தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தில், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. எனவே, அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்கிறோம். அதேநேரம், உரிய விதிகளைப் பின்பற்றி புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story