ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பொம்மாஜிகுளம் சோதனைச்சாவடியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்த இன்பராஜ் (வயது 21), பிரபு (20) மற்றும் ஆந்திர மாநிலம் சத்யவேட்டைச்சேர்ந்த பிரபாகர் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைபோல் திருவாலங்காடு ரெயில் நிலையம் அடுத்த சின்னம்மாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாலாஜி மகன் விமல்ராஜ் (19). இவர் சின்னம்மாபேட்டையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விமல்ராஜை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story