தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
x

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு வகை விலங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்த பை ஒன்று லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த பையைத் திறந்து பாா்த்தனா். அதில் 5 அரிய வகை வெளிநாட்டு விலங்கு குட்டிகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை விலங்குகள். இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்கிருமிகள் ஏதாவது இருக்குதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழும் அவரிடம் இல்லை.

மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் எந்தவிதமான சான்றிதழ்களும் அவரிடம் இல்லாததால் 5 விலங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். இவை ஆப்பிரிக்கா, இந்தோனேசிய ஆகிய நாடுகளில் உள்ள தேவாங்கு வகையைச்சோ்ந்த அரிய வகை விலங்கு குட்டிகள். இந்த விலங்கை கஸ்கஸ் என்று கூறுவாா்கள்.

இதையடுத்து கஸ்கஸ் விலங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story