மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை


மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை
x

சென்னையை அடுத்த புழலில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் ஆசிரியர் காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 70). இவர், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள உறவினர் விட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 75 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story