ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட, இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் ஞாயிறன்று இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து துன்புறுத்துவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, சேதப்படுத்துவது என்பதை தொடர்ந்து செய்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமையன்று 534 விசைப்படகுகளில் அனுமதிச்சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைதாண்டி வந்ததாகக் தெரிவித்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கே.கிறிஸ்டோபர் என்பவருக்குச் சொந்தமான படகையும் அதில் சென்ற மீனவர்கள் எஸ்.லியோன், ஜாய்சன், எஸ்.எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்பு குமார் மற்றும் க.அந்தோணி ராயப்பன் என்பவருக்குச் சொந்தமான படகையும் அதில் சென்ற கே.அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், ஏ.பாண்டி, செந்தூர்பாண்டி, ஏ.ரபிஸ்டன், மருது, ஆர்.குமரன் ஆகிய 15 பேர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இதே போன்று கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியும் 7 மீனவர்களையும் ஒரு படகையும் சிறைப்பிடித்துச் சென்றனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் செய்து வருகின்றனர்.

சிறைப்பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. இது இராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையைக் கண்டித்தும், தொடரும் இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததைக் கண்டித்தும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். எனவே, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story