அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்


அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்
x

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முத்துக்குமார் (வயது 29) என்ற மகன் உண்டு. இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு, இந்த தொழிலை செய்து வந்தார்.

இந்நிலையில் பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் மூத்த சகோதரர் பெரியசாமியின் குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக தொடர்ந்து முன்விரோதம் இருந்து வருகிறது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் பழிக்குப்பழி என கொலை சம்பவங்கள் தொடர்ந்தன.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் நேற்று காலை முத்துக்குமார், பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்ய, தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு கொண்டு சென்றார். பின்னர் பழுது பார்க்கப்பட்ட மோட்டாரை, அவர் காலை 11 மணியளவில் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது.

மேலும் அந்த கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றதால், அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, அங்கிருந்த மெயின்ரோடு வழியாக தப்பி ஓடினார். ஆனால் ஓட ஓட அவரை விரட்டி சென்ற அந்த கும்பல், ஒரு டீக்கடை அருகே சென்றபோது அரிவாளால் முத்துக்குமாரின் முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை சம்பவம் தொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அரியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story