காவிரி விவகாரம்: வரும் 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


காவிரி விவகாரம்: வரும் 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு, திமுக அரசைக் கண்டித்து வரும் 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மக்களுக்குத் தொண்டு செய்திட வேண்டும்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்களுடைய நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு.

ஆனால், நானும் 'டெல்டாகாரன்' என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபின் விவசாயிகளுக்கு குறிப்பாக, டெல்டா விவசாயிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம்; வானிலை ஆராய்ச்சி மையத்தின் எதிர்வரும் பருவமழை பெய்தல் பற்றிய ஆலோசனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த ஆண்டு 100 அடிக்குமேல் தண்ணீர் உள்ளது என்ற ஒரே காரணத்தால், பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் மாதம் 12-ம் தேதியே முன்யோசனையின்றி தண்ணீரைத் திறந்துவிட்டார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது என்றவுடன் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணையில் தண்ணீர் குறைய ஆரம்பித்தவுடன், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நமது பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் அந்தந்த மாதங்களிலேயே பெற்றிருக்க வேண்டும். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில், திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோது, மே மற்றும் ஜூன் மாதங்களில் கர்நாடகா தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

குறுவை பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகிய பிறகு, 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பதுபோல், நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகும், காலம் கடந்து பெயரளவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரை நேரில் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வது மற்றும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் காலதாமதமாக மேற்கொண்டது இந்த திமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சை நம்பி, சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகின.

எனவே, உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த திமுக அரசைக் கண்டித்தும்; உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தியும், அதிமுக சார்பில் (6.10.2023) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திருவாரூர் மாவட்டத்தில் ஆர்.காமராஜ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செம்மலை ஆகியோரது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா விவசாயிகள், தஞ்சையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story