நீலகிரி, கோவை மலை பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு


நீலகிரி, கோவை மலை பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வங்கக் கடலில் இருந்து கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகம் காரணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வரும் 7-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு நிர்வாக ரீதியான தயார் நிலைக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்த வரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story