சென்னை-கோவை இடையே 'வந்தே பாரத்' ரெயில் - கட்டண விவரம்


சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் - கட்டண விவரம்
x

சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

சென்னை,

சென்னை-கோவை இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயில், வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும். இதன்மூலம் சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்:- 20643) சேலம், ஈரோடு, திருப்பூர் என 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை சென்றடையும். முன்னதாக இந்த ரெயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதைத்தொடர்ந்து 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரெயில், அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும்.

அதேபோல மறுமார்க்கமாக கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் (20644), தினந்தோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். இந்த ரெயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் அடையும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல சேர் கார் பயணத்துக்கு ரூ.1,365-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல கோவையில் இருந்து சென்னைக்கு சேர் கார் பயணத்துக்கு ரூ.1,215-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,310-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Next Story