தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை


தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 28 Jan 2024 10:12 AM GMT (Updated: 28 Jan 2024 10:13 AM GMT)

தொகுதி பங்கீடு குறித்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று பகல் 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து 14 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்த உள்ளது. திமுக தரப்பில் 7 அல்லது 8 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. அதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்தியா கூட்டணியில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story