கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம்


கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம்
x

கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் 'எல்என்டி' புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகிற 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில், கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 8-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "திமுக எம்.பி.க்கள்" கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதல்-அமைச்சரும், கழகத் தலைவருமான, மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என "முப்பெரும் விழா" ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14-ம் தேதிக்கு பதிலாக ஜூன்-15ம் தேதி மாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றி பெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story