பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது - சோனியா காந்தி


பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது - சோனியா காந்தி
x
தினத்தந்தி 20 Dec 2023 2:13 PM IST (Updated: 20 Dec 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த பூஜ்யநேர விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வண்ணப்புகைகுண்டுகளை வீசியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவையிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சஸ்பெண்டு நடவடிக்கையை கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி கூறியதாவது, 'பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. இதுவே பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை மோசமாக கையாண்டிருப்பார்கள்'

இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story