ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்


ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்
x

தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று ஏற்பட்ட பிரச்சினையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பக்தர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

கோவிலுக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து, நடந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கோவிலுக்குள் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம், இந்துக் கோவில்களில் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பியிருக்கிறார்கள்.

நீண்ட வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைத்ததை ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பியதன் விளைவாக, கோவில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக ஏன் விரும்புகிறது? என்பதற்கு அவர்களின் இத்தகைய ஆணவமும் ஒரு காரணம்.

கோவில் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story