தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை - நிர்மலா சீதாராமன்


தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 April 2024 9:06 AM GMT (Updated: 2 April 2024 10:56 AM GMT)

கச்சத்தீவை சின்ன பாறை தான் என்று கூறியவர் இந்திரா காந்தி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே முன்னாள் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும் கருதவில்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையம், இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் தேர்தலுக்காக தான் பேச வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது. கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அப்போதும் கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் கூட்டணி வைத்துள்ளன. தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது தி.மு.க. அமைதியாகவே இருந்தது. ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ், 1967க்கு பிறகு தமிழகத்தில் இன்றும் வெற்றி பெற முடியவில்லை. அக்ஷாய் ஷின் பகுதியை தாரை வார்த்ததும் காங்கிரஸ் அரசு தான். கச்சத்தீவை சின்ன பாறை தான் என்று கூறியவர் இந்திரா காந்தி. தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story