ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டவேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை


ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டவேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை
x
தினத்தந்தி 24 Jan 2023 3:37 PM GMT (Updated: 24 Jan 2023 3:39 PM GMT)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டவேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

நெல்லை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இடைத்தேர்தலை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிறகு இடைத்தேர்தல் நடந்துள்ளது. அதில் 80 சதவிகிதத்திற்கு மேல் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெற்றுள்ளனர்.

காரணம் ஆளும்கட்சியின் பணபலம், படைபலம், அதிகாரிகளின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல். சுதந்திரத்திற்கு பின் நடந்த எல்லா இடைத்தேர்தலிலும் இது தான் தரவு. 80 சதவிகிதம் ஆளும்கட்சி வெற்றிபெற்றுள்ளது.

ஆனால், இடைத்தேர்தல் முடிவடைந்து சிறிது நாட்களில் பொதுத்தேர்தல் வரும்போது அதே ஆளும்கட்சி தோல்வியடைந்திருக்கும். ஏனென்றால் இடைத்தேர்தலில் பணமழையாக கொட்டி ஏதேனும் செய்துவிடுவார்கள் என்பது தான்.

இந்த முறை திமுக தான் யோசிக்கின்றனர். அதனால் தான் இந்த முறை பாஜகவின் கருத்து என்னவென்றால் ஒரு வேட்பாளர் நியாயமான வேட்பாளர், மக்கள் மன்றத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர்.

இந்த ஒரு இடைத்தேர்தலிலால் திமுக ஆட்சி மாறப்போகிறதா?. திமுகவின் பெரும்பான்மை எங்காவது மாறப்போகிறதா?.

நாடாளுமன்ற தேர்தலுக்கே இன்னும் 14 மாதம் உள்ளது. அதன்பின் நமது பொதுத்தேர்தல் 2026-க்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. இது ஒரு இடைத்தேர்தல் அவ்வளவு தான்.

அதனால் இது மக்கள் மன்றத்திலும் தெரியும் இத்தேர்தலில் நாங்கள் யார் என்ற காட்டவேண்டிய நிலைமை பாஜகவுக்கு இல்லை. அதனால் தான் ஒரே ஒரு வேட்பாளர், வலிமையான வேட்பாளர்.

இதற்கு முன் அதிமுகவில் அந்த தொகுதியில் வெற்றிபெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். வெற்றிபெற்றவர்கள் இன்று அங்கு உள்ளனர். இதெல்லாம் நாம் பார்க்கிறோம். புதிதாக ஆராய ஒன்றுமில்லை. சற்று பொறுமையாக இருங்கள். எங்கள் கட்சி மூத்த தலைவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

31-ம் தேதிக்கு இன்னும் நாள் உள்ளது. ஒரு நல்ல முடிவு, முக்கிய முடிவு என்னவென்றால் திமுகவை எதிர்த்து நமது வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர இது பலபரீட்சை அல்ல. இந்த கட்சி பலம் என்ன அந்த கட்சி பலம் என்ன? என்பது இந்த தேர்தலில் தேவையில்லாத பேச்சு என்பது எனது கருத்து' என்றார்.




Next Story