3 நாள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி


3 நாள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
x

கோப்புப்படம்

ஊட்டி அருகே முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றியும், இந்திய மொழிகள் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்க வழிவகை செய்யும் திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்ல உள்ளார். இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6.15 மணிக்கு செல்கிறார். பின்னர் கவர்னர் இரவில் ஓய்வு எடுக்கிறார்.

இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி அருகே முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை கவர்னர் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 18-ந் தேதி காலை 11.30 மணியளவில் ஊட்டி ராஜ்பவனில் இருந்து கவர்னர் புறப்பட்டு கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

கவர்னர் வருகையையொட்டி நீலகிரியில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ராஜ்பவன், அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story