அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது


அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது
x

நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு 12.30 மணிக்கு மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் இதே விவகாரம் தொடர்பாக சென்னை சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்விடம் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று இரவே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணை நடத்துகிறது. நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு 12.30 மணிக்கு மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அண்ணாநகரில் உள்ள நீதிபதி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Next Story