கனமழை பாதிப்பு எதிரொலி: சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு


கனமழை பாதிப்பு எதிரொலி: சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு
x

கோப்புப்படம்

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பு காரணமாக சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 'மிக்ஜம்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது.

இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மாநாட்டு ஏற்பாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்திருந்தார்.

இந்த நிலையில் அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக வருகிற 24-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story