தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்: 'அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி தொடரும்' - எடப்பாடி பழனிசாமி பேட்டி


தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்: அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி தொடரும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லை வந்தார். இங்கு நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுங்கட்சி செயல்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் செய்தது தந்தைக்கு நினைவிடம் கட்டி இருப்பதுதான். மதுரையில் அவருடைய தந்தை பெயரில் நூலகம் அமைத்து உள்ளனர்.

மேலும் பேனா சின்னம் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்குமா? நடக்காதா? என தெரியவில்லை. கடலில் கொண்டு பேனா வைக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். தரையிலேயே வைக்கலாம். மீனவ சமுதாய மக்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

அவரது நினைவு மண்டபம் அருகிலேயே அழகான பேனா வைக்கலாம், இது என்னுடைய கருத்து. ரூ.81 கோடியில் பேனா வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ.2 கோடியில் பேனா வைக்கலாம். மீதி ரூ.79 கோடிக்கு மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாம்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் பெருகிவிட்டது. கொலை நடக்காத நாளே கிடையாது. ஆயுதப்படை போலீஸ் ஜீப்பையே திருடி செல்லும் வகையில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது. ரேஷன் வாடகை லாரிக்கான டெண்டர் பெட்டியை தூக்கி சென்று விட்டனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் சீரழியும் சூழ்நிலையை பார்க்கிறோம். திறமையற்ற முதல்-அமைச்சர் நாட்டை ஆள்வதால் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை, தொண்டர்களை சந்திப்பேன்.

அ.தி.மு.க. பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு யாரும் உதவியது இல்லை. அ.தி.மு.க. பல கட்சிகளை தாங்கிப்பிடித்து உதவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். தற்போது பா.ஜனதா உடன் கூட்டணியில்தான் உள்ளோம். அவர்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள். இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அந்தந்த நேரத்துக்கு ஏற்ப கூட்டணி அமையும். இந்த கூட்டணி தொடரும்.

ஒவ்வொரு கட்சி தலைவரும் தனது கட்சியை வளர்க்க பார்ப்பார்கள். எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் அந்தந்த கட்சியை வளர்க்க பாடுபடுகிறார்கள். ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் தி.மு.க.வை மட்டுமே வளர்க்கின்றன.

மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்ந்துவிட்டது. இதை கண்டித்து கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து உள்ளதா? மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து உள்ளதா? தி.மு.க.வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் அந்த கட்சிகள் காணாமல் போய் விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மதுரை புறநகர் கூத்தியார்குண்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. 520 வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. அதில் சிலவற்றை மட்டும் செய்து இருக்கிறார்கள். 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட 8 பேர், தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். செந்தில்பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று இருக்கிறார். ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க.விலும் நின்று ஜெயித்து இருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய அந்த நபர்தான் முக்கிய அமைச்சராகவும் இருக்கிறார். அவரை ஸ்டாலின் புகழ்ந்து கொண்டு இருக்கிறார். பாவம் தி.மு.க.வில் இரவு-பகல் பாராமல் எத்தனையோ பேர் உழைத்து இருக்கிறார்கள். மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியமான பதவி, இலாகா இன்னும் கிடைக்கவில்லை.

இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வாரிசுகள் கிடையாது. நாம் தான் அவர்களது வாரிசு. அவர்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக தங்களை அர்பணித்தார்கள். ஏழைகளுக்காக சிந்தித்து, அவர்கள் கொண்டு வந்த திட்டங்களால் தான் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. ஏழைகளுக்கு ஆசை வார்த்தை காட்டுவது. கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது. ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது. அது தான் தி.மு.க.வின் வாடிக்கை. தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம், சிலிண்டருக்கு ரூ.100 மானியம், முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ம் என்று சொன்னார்கள். 21 மாதம் ஆகியும் நிறைவேற்றவில்லை.


Next Story