சின்னவர் என்று அழைக்கும்படி நானாக சொல்லவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சின்னவர் என்று அழைக்கும்படி நானாக சொல்லவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர். ஜெ.கார்டனில் நடைபெற்றது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு 1600 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது நான் மிகவும் ராசிக்காரன் என்று சொன்னார். அதிலே எனக்கு நம்பிக்கை கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் சென்று பிரசாரம் செய்ததால் தான் வெற்றிபெற்றது போல் பேசினார்கள். அந்த வெற்றி முத்தமிழறிஞர் கலைஞருக்கு கிடைத்த வெற்றி. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. உங்களை போன்ற கழகத்தினரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

தி.மு.க.வில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. நான் தான் உங்கள் அன்புக்கு அடிமை. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, என்னை சின்னவர் என்று அழைக்க சொன்னதாக கூறினார். இருக்கிற பிரச் சினை போதாதா? நான் அப்படி சொல்லவே இல்லை.

என்னைப்பற்றி நிறைய கூட்டங்களில் பேசும்போது, 'மூன்றாம் கலைஞர்' 'இளம் கலைஞர்', 'சின்ன கலைஞர்' இப்படி என் மீதுள்ள அன்பு காரணமாக இப்படி பேசுகிறார்கள். அவர்கள் என்னை பெருமைபடுத்துவதாக நினைத்துக் கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துறாங்க. கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான். ஒரே கலைஞர் தான்.

இனி எத்தனை பேர் பிறந்திருந்தாலும் கலைஞருக்கு நிகர் யாராலும் பிறக்க முடியாது. எனவே ஒரே கலைஞர் தான். ஒரே தலைவர்தான். அதைத் தான் நான் சொன்னேன். இங்கு இருக்கிற உங்களோட வயது, உங்களுடைய அனுபவம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது நான் ரொம்ப சின்னவன்.

அதனால் என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேனே தவிர நானாக போய் எல்லோரும் என்னை 'சின்னவர்' என்று கூப்பிடுங்கள், 'சின்னவர்' என்று கூப்பிடுங்கள் என்று சொன்னது போல் பேசிக்கிட்டு இருக்காங்க, நீங்களே என்னை புரிஞ்சுக்கல.

நான் பெரியாரை நேரில் பார்த்தது கிடையாது. பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்குள்ள மூத்த முன்னோடிகள் நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.

நான் பார்த்தது எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையும், இனமான பேராசிரியர் தாத்தாவையும், நம்முடைய தலைவரையும் தான் பார்த்திருக்கிறேன். இவர்களை பார்த்து தான் நான் அரசியலை கற்றுக் கொள்கிறேன் எனக் கூறினார்.


Next Story