நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? கமல்ஹாசன் பதில்


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? கமல்ஹாசன் பதில்
x

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

புகைப்பட கண்காட்சி திறப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியமாக புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து இருந்தார். விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் கவிஞர் ஜோ.மல்லூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரிய புகைப்படங்கள்

கண்காட்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தை பருவம் முதல் தற்போது முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளது வரையிலான புகைப்பட தொகுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. பிரதமர் மோடி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. நிறுவனர் மறைந்த ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், மு.க.ஸ்டாலினின் தாத்தா முத்துவேல், தந்தை கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களும், மு.க.ஸ்டாலின் தனது சகோதர, சகோதரிகளுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என ஏராளமான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

படிப்படியாக உயர்ந்தவர்

பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். நெருங்கிய நட்பு இல்லை என்றாலும், நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவரும் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறோம். ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருப்பதில் சந்தோசம் அதிகம் உண்டு என்றாலும், சவால்களும் நிறைய உண்டு.

சந்தோசத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக, இளைஞர் அணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழக முதல்வராக என்று படிப்படியாக உயர்ந்து வருவது அவரது பொறுமையை மட்டும் அல்ல திறமையையும் காட்டுகிறது.

நான் இளம் கமல்ஹாசனாக சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொல்ல நினைத்ததை எல்லாம், சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்து, அவருக்கு தன் தந்தையின் செவி மிக அருகில் இருந்தபோதிலும் தனக்கென்று சொல்லிக்கொள்ளாமல் படிப்படியாக கியூவில் நின்று வந்து தன் திறமையை நிரூபித்து முதல்-அமைச்சராகி உள்ளார்.

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியது இருக்கிறது. சரித்திரத்தை மாற்றி எழுத துடித்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். குறிப்பாக தமிழர்களின் சரித்திரத்தை மாற்றிக்காட்டுவதில் பெரிய ஆர்வம் காட்டும் பலர் இருக்கிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் நாம் சரித்திரத்தை நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

தி.மு.க.வுடன் கூட்டணியா?

அப்போது நிருபர்கள், 'நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க இதை ஒரு அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாமா?' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், 'நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசும் நேரம் இதுவல்ல. 'சீன் பை சீன்'தான் கதையை நகர்த்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதல்-அமைச்சரின் சரித்திரத்தை படம் பிடித்து வைத்திருப்பதைதான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறினார்.

புகைப்பட கண்காட்சியில் மொத்தம் 170 புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story