சவ ஊர்வலத்தில் போலீஸ்காரர் - மனைவியை தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு


சவ ஊர்வலத்தில் போலீஸ்காரர் - மனைவியை தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு
x

பெரம்பூரில் சவ ஊர்வலத்தில் போலீஸ்காரர் மற்றும் மனைவியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை மாதவரம் பிருந்தாவனம் கார்டனை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 32). இவர், மாதவரம் பால் பண்ணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) உடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவில் உள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது எதிரே சவ ஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். சவ ஊர்வலத்தில் வந்த ஒருவர், கையில் இருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு பூவை தூவினார். இதனை கோடீஸ்வரன் தட்டிக்கேட்டார்.

இதனால் சவ ஊர்வலத்தில் குடிபோதையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரனிடம் தகராறு செய்து, மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டனர். மேலும் போலீஸ்காரர் கோடீஸ்வரன் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் யுவஸ்ரீக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கோடீஸ்வரன் மனைவியுடன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story