லாரி டிரைவரை திருமணம் செய்து... முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு பெண் ஓட்டம்...


லாரி டிரைவரை திருமணம் செய்து... முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு பெண் ஓட்டம்...
தினத்தந்தி 26 Sep 2022 7:41 PM GMT (Updated: 28 Sep 2022 7:50 AM GMT)

எடப்பாடி அருகே திருமணம் செய்து விட்டு லாரி டிரைவரை ஏமாற்றிய பெண் தலைமறைவானார். முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த அவரை போலீஸ் தேடுகிறது

சேலம்

லாரி டிரைவர்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48), லாரி டிரைவர். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் லாரி டிரைவராக உள்ளேன். எனக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய மனைவி ரம்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதையடுத்து என்னையும், என்னுடைய மகனையும் கவனித்து கொள்ள 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அதற்காக பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தேன். ஜோடி ஆப் என்ற செயலியில் பதிவு செய்தால் உடனடியாக பெண் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறவே அதில் என்னுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் எனது புகைப்படத்தையும் பதிவு செய்ேதன்.

மார்த்தாண்டம் பெண்

இந்த நிலையில் அதே ஆப்பில் லதா எனற பெண்ணும் தான் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் என்றும் பதிவு செய்து இருந்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் நான் தொடர்பு கொண்டு பேசினேன். அந்த பெண்ணும் என்னுடன் பேசினார். நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம்.

ஒரு கட்டத்தில் அந்த பெண், தன்னுடைய உண்மையான பெயர் கவிதா என்றும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும், தன்னுடைய கணவர் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டிதிருப்பதால், தன்னையும், என்னுடைய தாயாரையும் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதாக கூறி அழுது புலம்பினார். உடனே நான், உங்கள் தாயாரிடம் செல்போனை கொடுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய தாயார் வாய் பேச முடியாதவர் என்று கூறினார்.

கோவிலில் திருமணம்

இதை உண்மை என நம்பிய நான், அந்த பெண் கேட்டபடி பல கட்டமாக அவரது வங்கி கணக்கில் பணம் ெசலுத்தி வந்தேன். கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சேலத்துக்கு வந்த அந்த பெண், தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். நானும் ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

மேலும் எனது வீட்டில் இருந்த நகைளை அணிவித்து அழகு பார்்த்தேன். வீட்டு பீரோ சாவியை கொடுத்தேன். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பரிசாக வாங்கி கொடுத்தேன். அன்று எங்களுக்கு முதலிரவு. பகல் முழுவதும் சிரித்து சிரித்து பேசிய அவர், இரவு ஆனவுடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வந்தோம். இரவு சோர்வாக இருப்பதாக கூறி படுத்து கொண்டார்.

நகை, பணத்துடன் ஓட்டம்

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அந்த பெண்ணை காணவில்லை. என்னுடைய வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. மேலும் அவர், என்னுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி கடன் வாங்கியதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது, அம்மா நினைவு வந்து விட்டதால் ஊருக்கு வந்து விட்டேன் என்று கூறி என்னை சமாதானம் செய்தார். தற்போது தான் அவர் என்னை ஏமாற்றியது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், என்னுடைய நகை, பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமறைவு

இந்த புகார் மனு குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் ஏற்கனவே கோவை பகுதியில் இதேபோன்று ஒருவரை திருமணம் செய்து விட்டு ஏமாற்றி சென்றது தெரிய வந்தது.

முதலிரவில் லாரி டிரைவரை ஏமாற்றி விட்டு நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கொங்கணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story