கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் - வருகிற 30-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்


கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் - வருகிற 30-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 27 Dec 2023 4:26 AM GMT (Updated: 27 Dec 2023 4:43 AM GMT)

30-ம் தேதி இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கோவை,

நாடு முழுவதும் ஏராளமான வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு ரெயில்களாகும். மேலும் இந்த ரெயில்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் குறைவு என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரெயில்கள் இந்தியாவில் இயக்கப்படும் பிற ரெயில்களை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது. தமிழகத்தில் கோவை-சென்னை மற்றும் சென்னை-நெல்லை, சென்னை-மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தென்னக ரெயில்வே சார்பில் கோவை-பெங்களூரு இடையே வருகிற 30-ந் தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை கோவைக்கு வந்தன. கோவை ரெயில் நிலையத்தில் இந்த வந்தே பாரத் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story