கோடையின் கொடுமையை தணிக்க நீர்மோர் கொடுப்போம் - கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்


கோடையின் கொடுமையை தணிக்க நீர்மோர் கொடுப்போம் - கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2024 11:04 AM GMT (Updated: 30 April 2024 11:10 AM GMT)

நீர்மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை வெப்பத்தைத் தணிக்க பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர்ப்பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சென்னையில் நம் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும் தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது.

கொடிய நோய்த் தொற்றான கொரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையை போல, இந்த கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும், நம் கட்சி உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன். அனைவரும், தங்கள் பகுதியின் சாலை ஓரங்களில் நிழற்குடைகள் அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், நீர் மோர் வழங்கியும், தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க உறுதி ஏற்போம்.

சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்கும் இந்த சமூகப் பணியினை ஒவ்வொரு பூத்திலும், மாவட்ட அளவிலும், மற்றும் மாநில அளவிலும் உள்ள அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும், அமைப்பாளர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன். அப்படி, தங்கள் பகுதியில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் நீர்மோர்ப் பந்தல் போன்ற நற்பணிகள் குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல் விவரங்களை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story