மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி. அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57), கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர் செல்வராஜ் (48), இருவரும் பூந்தமல்லியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி அடுத்த குமணண்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

செல்வராஜ் லேசான காயமடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (49) இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் உதயகுமார் மனவிரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story