ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்தது பின்லாந்து..!


ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்தது பின்லாந்து..!
x
தினத்தந்தி 27 Feb 2022 9:59 AM GMT (Updated: 27 Feb 2022 9:59 AM GMT)

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில் ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க பின்லாந்து தடைவிதித்துள்ளது.

ஹெல்சின்கி, 

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட பல்வேறு  நாடுகள் ரஷியாவை வலியுறுத்து வருகின்றன. உக்ரைனின் அண்டை நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியாவின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன. மாஸ்கோவும் பதிலுக்கு அந்த நாடுகளின் விமானங்கள் தங்கள் எல்லையின் மேல் பறக்க தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பின்லாந்தும் ரஷிய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. பின்லாந்து ரஷியாவுடன் ஏறக்குறைய 1300 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்லாந்து உக்ரைனுக்கு ஆதரவாக குண்டு துளைக்காத ஆடைகள், தலைக்கவசங்கள், நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவற்றை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு சுமார் 40 பீரங்கிகளை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

Next Story