பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் அழைப்பு - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்


பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் அழைப்பு - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2023 9:18 PM GMT (Updated: 28 Dec 2023 6:30 AM GMT)

இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேச அதிபர் புதின் வாய்ப்பளிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மாஸ்கோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ரஷியா இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ரஷியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிபர் புதின், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்டேன். அமைச்சர்கள் மந்துரோவ் மற்றும் லாவ்ரோவ் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் மேலும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதலை அவர் பாராட்டினார்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story