கேட்ச் பிடித்த ரோகித் சர்மாவை கட்டித்தழுவிய கோலி...!! வைரலாகும் வீடியோ


கேட்ச் பிடித்த ரோகித் சர்மாவை கட்டித்தழுவிய கோலி...!! வைரலாகும் வீடியோ
x

image courtesy;AFP

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இலங்கை கேப்டன் ஷனகா, ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின.

'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா வீசிய 26-வது ஓவரின் முதல் பந்தில் இலங்கை அணியின் கேப்டன் ஷனகா ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய வீரர்கள் அதை கொண்டாட துவங்கினர். இதில் விராட் கோலி ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story