நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ராமலெட்சுமி தம்பதியரின் மகன் சேர்மதுரை (வயது 12) என்பவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பெருங்குடி பகுதி-1 கிராமம், வடக்கன்குளம் CMS குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருகிலுள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8.7.2025 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் CMS குழந்தைகள் இல்ல வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.