சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு... ... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-02-14 07:01:28.0

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.

நான்காம் நாளான நாளைய தினம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேச உள்ளார். விடுமுறைக்குப் பிறகு வரும் 19ம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். 


Next Story