“ஜன நாயகன்” பட தணிக்கை சான்றிதழ் விவகாரம்: வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
"இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் நீதிபதி பிடி ஆஷா முன்பு முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் ‘ஜனநாயகன்’ தயாரிப்பு நிறுவன தரப்பில், “படத்தை தணிக்கைக்கு அனுப்பினோம். 3 காட்சிகளை நீக்க கோரினார்கள். குறிப்பிட்ட 3 காட்சிகளையும் நீக்கிவிட்டு மீண்டும் தணிக்கைக்கு அனுப்பினால், மறு ஆய்வு குழுவிடம் செல்லுமாறு கூறுகிறார்கள். படத்தை 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள்” என்று கூறப்பட்டது.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சுந்தரேசன், “படத்தை 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டு, அதன்பிறகு தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்து, உடனடியாக தணிக்கை செய்து கேட்கிறார்கள். அது எப்படி முடியும்” என்று கேள்வி எழுப்பினார். உடனே நீதிபதி பி.டி.ஆஷா, “ஏன் நீங்கள் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பினீர்கள். அதற்கான ஆவணங்களை நீங்கள் நாளை தாக்கல் செய்ய வேண்டும்” என்று சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். அதன்படி, ‘ஜன நாயகன்’ பட வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.






