

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அறங்காவலர் குழு தலைவரை, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பி. சிவராமன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தரபட்டர் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தனது தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து ஊர்வலமாக வந்து ரங்கநாதருக்கு சமர்ப்பித்தார். அதன்பிறகு கோவிலில் தரிசனம் செய்த அறங்காவலர் குழு தலைவர், அதிகாரிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
கைசிக ஏகாதசியை முன்னிட்டு 2006-ம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பண்டைய வைணவ கோவில்களுடன் ஆன்மிக உறவுகளை பேணுவதற்காக திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்களை வழங்குவது ஒரு பாரம்பரியமாகும்.
பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.