அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு

முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த குழுவில் ராமதாசின் மகள் காந்திமதி இடம்பெற்று இருந்தார். 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி தரப்பு பதில் தராத நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்,பாமக நிர்வாக குழு கூட்டத்திற்கு பின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நோட்டீஸுக்கு ஆகஸ்டு 31 கெடு விதித்த நிலையில் அன்புமணி பதில் அளிக்காததால் மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 16 குற்றச்சாட்டுகளுக்கு செப்.10-ம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என பாமக 2-வது முறையாக கெடு விதித்துள்ளது என்றார்.






