வந்தே மாதரம் பாடல் விவகாரம்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கோப்புப்படம்
இந்திய மக்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அந்த பாடலின் முக்கியமான பத்திகளை காங்கிரஸ் கட்சி நீக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் ரவீந்திரநாத் தாகூரின் விருப்பப்படியே கடந்த 1937-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் பாடலின் பிற பத்திகளை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த கட்சி கூறியுள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘காரிய கமிட்டி நடைபெறுவதற்கு 3 நாட்கள் முன்பு தாகூர், ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் வந்தே மாதரம் பாடலுடன் தனக்குள்ள சிறப்பு உறவைக் கொண்ட குருதேவ் (தாகூர்)தான், பாடலின் முதல் இரண்டு சரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். உண்மையில், அவரது கடிதத்தின்படிதான் தீர்மானம் நிறைவேற்றப்படடது’ என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், ‘அப்படிப்பட்ட தாகூர் மீதே பிரிவினை சித்தாந்தம் கொண்டவர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பொய்களும், திரிபுகளும் எல்லையற்று இருக்கும் ஒரு மனிதரின் வெட்கக்கேடான அறிக்கை இது. இதற்காக இந்திய மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.






