உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற தொழிலாளி

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனது தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டோனிகரா பகுதியைச் சேர்ந்தவர் மாரம்மா(வயது 35). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா(40) என்பவருடன் திருமணம் நடந்தது. பின்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனது தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை பார்க்க சங்கப்பா சுராபுராவிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அப்போது மாரம்மா உல்லாசத்துக்கு மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டில் இருந்த கோடரியால் மாரம்மாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மாரம்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கப்பா பயத்தில் உடனடியாக சுராபுரா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சங்கப்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






