தூத்துக்குடியில் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


தூத்துக்குடியில் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் சேசுராஜா (வயது 52) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான குருசாமி மகன் மாரிச்செல்வம்(41) மற்றும் ஆறுமுகம் மகன் அருண்சிங்(33) ஆகியோரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று மாரிச்செல்வம், அருண்சிங் ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் சிவன்ராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story