தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு


தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு
x

கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின்பேரில், மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா ஆலோசனையின்படி, சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதில் கடந்த வாரம் 35 மாடுகள் பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி நகர்நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேற்று இரவு ஒரு மணி அளவில் பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் முன்பு சாலைகளில் திரிந்த எட்டு மாடுகளை பிடித்தனர்.

மேலும் முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக்நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த 17 மாடுகள் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4 மணி வரையிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்ததால் பிடிக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் மாநகராட்சி கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அங்கு மாடுகளுக்கு உணவு வழங்கி பராமரிக்கப்பட்டது.

கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், இந்த நிலை தொடருமாயின் அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story